வெள்ளி, 13 நவம்பர், 2015

விழுப்புரம் மண்ணில் ஜவஹர்லால் நேரு...

விழுப்புரத்தின் வடக்கில் அமைந்துள்ள ஒரு பகுதிக்குப் பெயர் கமலா நகர். இது, நேருவின் மனைவியார் பெயரில் அமைந்தது என்பதும், இந்நகருக்கு நேரு அவர்களே அடிக்கல் நாட்டினார் என்பதும் நிறைய பேருக்குத் தெரியாது என்றே நினைக்கிறேன்.
1936இல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஜவஹர்லால் நேரு தேர்ந் தெடுக்கப்பட்டார். அப்போது அவருக்கு வாழ்த்துக் கடிதம் எழுதிய விழுப்புரம் காங்கிரஸ் முன்னணி வீரர் ஆதிநாராயணன், “நேரு அவர்கள் விழுப்புரம் வர வேண்டும். காங்கிரஸ் பொன்விழா நினைவாக விழுப்புரத்தில் கட்டப்பட உள்ள கட்டடத்திற்கு அடிக்கல் நாட்ட வேண்டும்என அழைப்பு விடுத்தார்.
நேருவின் மனைவி கமலா மறைவுக்குள்ளான நேரம் அது. அவரது நினைவாக விழுப்புரத்தில் நகர் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்பதும் ஆதிநாராயணின் விருப்பம்.
1936ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி விழுப்புரம் வந்த ஜவஹர்லால் நேரு, கமலா நகருக்கு அடிக்கல் நாட்டினார்.
இதனைத் தொடர்ந்து விழுப்புரம் நகரசபை சார்பில் அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, அவைத்தலைவர் வாழ்க என்பது L0ng live chirman என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.
இதனைப் பார்த்த நேரு, அருகில் அமர்ந்திருந்த புதுவை மக்கள் தலைவரான வ.சுப்பையாவிடம் “Look at this gentleman. Be wishing a long life of himself(பார்த்தீர்களா இந்தத்தலைவர் தானே நெடுநாளைக்கு வாழ வேண்டுமென ஆசைப்படுகிறார்) என நகைச்சுவையுடன் சொன்னாராம்.
இந்நிகழ்ச்சியினைத் தொடர்ந்து காங்கிரஸ் சமூகசேவகி ஜெகதாம்பாள் ஏற்பாடு செய்திருந்த மாதர் நலச்சங்கக் கூட்டத்திலும் ஜவஹர்லால் நேரு பங்கேற்றார்.

துணை நின்றவை:
பிரெஞ்சிந்திய விடுதலை இயக்க வரலாறு – மக்கள் தலைவர் வ.சுப்பையா.

விழுப்புரம் வரலாற்றுச் சுவடுகள் – கோ.செங்குட்டுவன்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக