திங்கள், 16 நவம்பர், 2015

கீழ்வாலைப் பாறை ஓவியங்களும் சிந்துசமவெளி நாகரிகமும்

“தென்னிந்தியாவின் கற்கால மனிதன் காடுகளில் வசிக்கவில்லை. மலையை ஒட்டிய பீட பூமிகளில்தான் வசித்தான்என்பார் ஆய்வாளர் வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர்.

விழுப்புரம் மாவட்டத்தில் கீழ்வாலை, ஆலம்பாடி, உடையாநத்தம்,பெருமுக்கல் உள்ளிட்ட இடங்கள் தொல்பழங்கால மனிதர்கள் வாழ்ந்திருந்த இடங்களாகும்.

அவற்றிற்கான அடையாளங்கள் இன்றும் இப்பகுதிகளில் நிலைத்துள்ளன.

குறிப்பாகக் கீழ்வாலை பற்றி இங்குப் பேசலாம்.

விழுப்புரம் – திருவண்ணாமலைச் சாலையில் 28ஆவது கி.மீ.இல் அமைந்துள்ளது இந்த ஊர்.

நெடுஞ்சாலையில் இருந்து தெற்கே மண்சாலையில் இறங்கி சிறிது தூரம் நடக்க வேண்டும்.

சிறிதும் பெரிதுமானக் குன்றுகள் காணப்படுகின்றன. இதில், “இரத்தக் குடைக்கல் பாறைகுறிப்பிடத்தகுந்ததாகும்.


இந்தப் பாறையில்தான் விலங்கு, பறவை முகம் கொண்ட மனிதர்கள், கோடுகள் புள்ளிகளைக் கொண்ட ஏராளமானக் குறியீடுகள் என சிவப்பு நிறத்திலான ஓவியங்கள் நிறைந்துள்ளன. (அதனால்தான் இரத்தக் குடைக்கல் என்கின்றனேரோ?)

மங்கிய நிலையில் காணப்படும் இவ்வோவியங்கள் மீது தண்ணீர் தெளித்தால் பளிச்செனத் தெரியும்.



“கீழ்வாலை ஓவியங்கள் கி.மு.500இல் இருந்து 1000 ஆண்டுகளுக்கு உட்பட்டதாக இருக்கலாம்என அறிஞர் பி.எல்.சாமி தெரிவித்துள்ளார். “கீழ்வாலைப் பாறை ஓவியங்கள் பல சொற்களின் தொகுப்பு. ஒவ்வொரு ஓவியமும் ஒருசொல்லின் அறிகுறிஎன்பார் ஆய்வாளர் கா.இராஜன். “தொல்பழங்கால ஓவியம் பற்றிய வரைபடத்தில் தமிழகத்திற்கும் ஒருசிறப்பான இடத்தை அளிக்கும் வகையில் கீழ்வாலை ஓவியங்கள் அமைந்திருப் பதாகத்தெரிவித்துள்ளார் ஆய்வாளர் கே.வி.இராமன்.
  
உலகின் மிகச்சிறந்த நாகரிகங்களுள் ஒன்று சிந்துசமவெளி நாகரிகம். “தென்னிந்தியா வில் இருந்து வடக்கே சென்ற திராவிட மொழி பேசுநர் உருவாக்கியதே சிந்துவெளி நாகரிகம்என ஹீராஸ் பாதிரியாரும், “சிந்துவெளி நாகரிக எச்சங்கள் திராவிட நாகரிகம் சார்ந்தவைஎன சர் ஜான் மார்ஷலும் தெரிவித்துள்ளனர்.

திராவிட மொழி பேசுநர் வடக்கு நோக்கிப் பரவினர் எனும் கருத்தினை ஹெச்.ஆர். ஹால், பி.டி.சீனிவாச ஐயங்கார், வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர், கா.சுப்ரமணியப் பிள்ளை, மறைமலையடிகளார், சேவியர் தனிநாயகம் அடிகளார், ஞா.தேநேயப் பாவாணர் உள்ளிட்ட அறிஞர்களின் கருத்தாகும்.

மேலும் சிந்துவெளியில் காணப்படும் முத்திரை எழுத்துக்கள் தொல்தமிழே என்பதும் அறிஞர் பெருமக்களின் கருத்தாகவும் இருக்கிறது.

இந்நிலையில்,

தமிழகப் பாறை ஓவியங்கள் குறித்து மிகவும் ஆய்வுசெய்த ஆய்வாளர் இராசு.பவுன் துரை சொல்வார் “சிந்துசமவெளியில் கிடைக்கப்பெற்ற வரி வடிவங்களைப் போன்று கீழ்வாலையிலும் அமைந்துள்ளன.” “சிந்துவெளி எழுத்துக்கள் குமரி முனையில் இருந்து சிந்துவெளி வரை பரவியிருந்தது என்பதற்கு கீழ்வாலைப் பாறை ஓவியமும் சிந்துவெளி எழுத்தும் அருமையான சான்றுகளாக விளங்குவதாகபேராசிரியர் இரா.மதிவாணன் தெரிவித்துள்ளதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

80களின் இறுதியில் கீழ்வாலை ஓவியங்களைக் கண்டறிந்தவரும், இதுகுறித்து மிகவும் ஆய்வு செய்தவருமான அனந்தபுரம் கோ.கிருட்டின மூர்த்தி, “17 கோடுகள் உள்ள சூரியன், வட்டத்தில் கூட்டல் குறி, சாய்வான நிலையில் கூட்டல் குறி, சூலம், நட்சத்திரக் குறி, தொங்கும் உடுக்கை, வேர் உள்ள மரம் உள்ளிட்ட பல்வேறு வகையான குறியீடுகள் கீழ்வாலை ஓவியங்களில் காணப்படுவதாகவும், 50க்கும் மேற்பட்டக் குறியீடுகள் சிந்துவெளி முத்திரைக் குறியீடுகளோடு ஒத்திருப்பதாகவும்தெரிவித்துள்ளார்.


தொல்பழங்கால மனிதர்களின் கருத்துப் பரிமாற்றம், வேட்டையாடுதல், சடங்கு ஆகியவற்றை விளக்குவதாக கீழ்வாலை ஓவியங்கள் அமைந்திருக்கின்றன.

இதில் முக்கிய இடத்தைப் பெற்றிருப்பது, படகில் மூன்றுபேர் செல்வது போன்ற காட்சியாகும். “இது பழந்தமிழரின் கடல்சார் அறிவினைக் காட்டவல்லதுஎன்பார் முனைவர் சு.தில்லைவனம்.

உலகின் புகழ்ப்பெற்ற நாகரிகத்துக்குச் சொந்தக்காரர்கள் நாம். தொல் குடிமக்கள் வாழ்ந்தப் பகுதிகளில் நாமும் வசித்து வருகிறோம் என்றெல்லாம் நாம் பெருமை பாராட்டிக் கொள்ளலாம்.

இதற்கு வரலாற்று ஆதாரமாக இருக்கும் கீழ்வாலைப் பாறைஓவியங்களும், சுற்றுப்புறங்களும் இன்று எப்படி இருக்கின்றன?

ஓவியங்கள் அடங்கியப் பாறைகளைச் சென்றடைய சரியான வழித்தடம் கிடையாது. வழிகாட்டுநரும் இல்லை. தனியாரின் வயல்வரப்புகளைக் கடந்துதான் செல்ல வேண்டும். ஓவியங்கள்மீது கிறுக்கல் பிடித்தச் சிலர் கிறுக்கத் தொடங்கிவிட்டனர். பழங்கால மக்களின் வாழ்விடமாக இருந்தது, தற்போது குடிமக்களின் கூடரமாகியுள்ளது. மதுபாட்டில்களின் சிதறல்கள் உங்கள் கால்களைப் பதம்பார்க்கலாம். ஜாக்கிரதை!

மக்கள் பார்வையில் படாதவரை 3ஆயிரம் ஆண்டுகளுக்கும்மேல் பாதுகாப்பாக இருந்தப் பாறை ஓவியங்கள், மக்கள் பாதம்பட்ட 50ஆண்டுகளில் மெல்ல அழிவைச் சந்தித்து வருகின்றன என்றுதான் சொல்ல வேண்டும்!

சுற்றிலும் மலைக்குன்றுகள் தொடர்ந்து உடைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஓவியங்கள் உள்ள குன்றுகளை “உடைப்பாளர்களிமிருந்துக் காப்பாற்றியது அரசின் சாதனைதான். ஆனால் தொடர்ந்து இவை காப்பாற்றவும் பாதுகாக்கப்படவும் வேண்டுமே?   
உதவியவை:
தமிழரின் தோற்றமும் பரவலும் – வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர் (தமிழில் பி.இராமநாதன்)

தமிழ்நாட்டில் சிந்துவெளிக் குறியீடுகள் ஒரு பார்வை – அனந்தபுரம் கோ.கிருட்டின மூர்த்தி (மஞ்சரி ஏப் 1994)

தமிழ்நாட்டு ஓவியங்கள் – ஏ.எஸ்.இராமன்.

தமிழகப் பாறை ஓவியங்கள் – டாக்டர் இராசு.பவுன்துரை.

திராவிட மக்களின் சிந்துவெளி எழுத்துக்கள் – முனைவர் இரா.மதிவாணன்.

கல்வெட்டியல் – கா.இராஜன்.

பழந்தமிழர் நாகரிகச் சின்னம் அரிக்கமேடு – முனைவர் சு.தில்லைவனம்.


வரலாற்றில் விழுப்புரம் மாவட்ட ஊர்கள் – கோ.செங்குட்டுவன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக