செவ்வாய், 10 நவம்பர், 2015

தர்காவாக மாறிய பல்லவர் குடைவரை

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் தேதியன்று சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்துக்குச் சென்றேன்.
இரயில் நிலையத்தைவிட்டு வெளியே வந்ததும், யாரிடம் கேட்பது என சிறிது நேரம் யோசித்து நின்று கொண்டிருந்தேன்.
அதோ, எதிரில் நின்று கொண்டிருக்கும் ஆட்டோ டிரைவரிடம் சென்றேன். “மலையடி வாரத்துல தர்கா இருக்கே அங்கப் போவணும்என்றேன். “பஞ்சபாண்டவர் தர்காவா? வாங்கப் போவலாம்என்றார் ஆட்டோ டிரைவர் ஜம்புலிங்கம். (பெயரை பின்னால் தெரிந்து கொண்டேன்)
“அது என்ன பஞ்சபாண்டவர் தர்கா?ஆட்டோவில் ஏறி அமர்ந்ததும் ஜம்புலிங்கத்திடம் கேட்டேன்.
“இந்த மலைக்கு (இரயில் நிலையத்தில் அருகில் காணப்படும் குன்று) பஞ்சபாண்ட வர் மலைன்னு பேருங்க. இங்கக் கோயிலும் இருந்துச்சு. ஆனா, அது வழிபாட்டுல இல்ல. ரொம்ப வருசத்துக்கு முன்னாடி, இங்க ஒரு பாய் இருந்தார். தோல் கம்பெனி எல்லாம் வச்சிருந்தார். இங்க இருக்கறவங்களுக்கு எல்லாம் அவர்தான் வேலை கொடுத்தார். அப்புறம் மலையில இருந்தக் கோயில, தர்காவா மாத்திட்டாரு ஜம்பு லிங்கம் தமக்குத் தெரிந்த வரலாற்றை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.
இந்த வாய்மொழியில் வரலாறு இல்லாமல் இல்லை. இருக்கிறதுதான்.
அதற்குள் 2கி.மீ. வந்திருப்போம். பழைய பல்லவாரத்தில் இருக்கும் அந்த சாலையின் பெயர் தர்கா சாலை. அங்குதான் இந்த தர்கா. மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. ஆட்டோவைவிட்டு இறங்கிய நான் ஜம்புலிங்கத்தை சிறிது நேரம் காத்திருக்கும்படி சொல்லிவிட்டு, குன்றின் படிக்கட்டுகளில் ஏறினேன்.
அங்கு என்னை வரவேற்ற இசுலாமிய நண்பர் ஒருவர் “இது நானூறு வருட பழமையான தர்காஎனப் பெருமையுடன் அறிமுகம் செய்தார். உள்ளே சென்று பார்க்கவும் அனுமதி அளித்தார். உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதி கிடையாது.  


உண்மைதான். இந்த தர்காவுக்கு வயது 400 இருக்கலாம். ஆனால், இதற்கு முன்பு ஒரு கோயில் இருந்ததே அதன் வயது 1000ஐ கடந்திருக்கிறது.
இக்குடைவரை மகேந்திரவர்மன் காலத்தியதாகும். இங்குள்ள கல்வெட்டுகளில் ஸ்ரீமகேந்திர விக்ரமன், சேத்தகாரி, விசித்திர சித்தன், பகாப்பிடுகு – எனும் மகேந்திர வர்மனின் விருதுப் பெயர்கள் காணப்படுவதாக மயிலை சீனி.வேங்கடசாமி தனது “மகேந்திரவர்மன்எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இக்குடைவரையை மிகவும் ஆய்வு செய்த ச.கிருஷ்ணமூர்த்தி “இக்கோயில் ஐந்து கருவறைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. நடுவில் உள்ள மூன்று கருவறைகள் மும்மூர்த்திகளுக்கும், எஞ்சியவை பரிவாரத் தேவதைகளுக்கும் எடுக்கப்பட்டவைஎனத்தெரிவித்துள்ளார். (நூல்: தொல்லியல் நோக்கில் காஞ்சிபுர மாவட்டம்)
இப்போது இதன் தூண்களில் பழைய கல்வெட்டுகளையோ அல்லது குடைவரையின் பழைய தோற்றத்தையோ காணமுடியாது. வெள்ளை நிற வழவழ பெயிண்ட் அடிக்கப்பட்டும், டைல்ஸ் ஒட்டப்பட்டும் தோற்றம் அடியோடு மாற்றப்பட்டுவிட்டது.
மகேந்திர வர்மனின் விருதுப் பெயர்கள், தொல்லியல் துறையின் ஆண்டறிக்கைகளில் மட்டுமே உயிருடன் இருந்து கொண்டிருக்கின்றன.
என்னை அழைத்துச் சென்ற ஜம்புலிங்கமே, மீண்டும் இரயில் நிலையத்திற்கு அழைத்து வந்துவிட்டார்.

அந்த நேரத்தில் விழுப்புரம் வருவதற்கு இரயில் இல்லை. அதனால் பஸ்சை பிடிப்பதற்கு, பல்லாவரம் பஸ் நிலையம் நோக்கி நடைபோடத் தொடங்கினேன், மகேந்திர வர்மனின் வரலாற்றை அசைபோட்டுக் கொண்டு! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக