விழுப்புரம்
மாவட்டம் வானூர் வட்டத்தில் அமைந்துள்ளது.
திருஞான
சம்பந்தரும், திருநாவுக்கரசரும் போற்றிப் பாடியுள்ள தலம்.
இங்குக் கோயில்
கொண்டுள்ள இறைவன் சந்திரமௌலீசுவரர். மும்முகத்துடன் காட்சியளிக்கிறார். இறைவி
அமிர்தாம்பிகை.
வரதராஜப் பெருமாளுக்கு
தனி சன்னதி இருக்கிறது. கோயில் கருவறையின் தென் பகுதியில் குண்டலினி மாமுனிவரின்
ஜீவ சமாதி இருக்கிறது.
கோச்செங்கட்
சோழனால் செங்கற் கோயிலாகக் கட்டப்பட்ட சந்திர மௌலீசுவரர் கோயில், இராஜராஜ சோழனின்
16ஆவது ஆட்சியாண்டில் (கி.பி.1000-1001) கருங்கற் கோயிலாக மாற்றப்பட்டது.
இத்திருப்பணியைச்
செய்தவர் கண்டராதித்த சோழனின் மனைவியும் உத்தம சோழனின் தாயாருமான செம்பியன்மாதேவி
ஆவார்.
“இளமையிலேயே
விதவையாகி, பிறகு நீண்ட காலம் வாழ்ந்த செம்பியன் மாதேவி தன் வாழ்க்கை முழுவதையும்
கோயில் பணிகளுக்கே காணிக்கையாக்கினாள். அவளுடைய வாழ்வில் கடைசியாக அடிக்கல்
போடப்பட்ட கோயில்களுள் ஒன்று, திருவக்கரையில் சந்திர மௌலீசுவரர் பிரதிஷ்டை
செய்யப்பட்ட கற்கோயில்” என்கிறார்
வரலாற்று ஆய்வாளர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி.
சோழஅரசன் இரண்டாம் இராஜாதிராஜனின் ஏழாம் ஆட்சியாண்டில்
(கி.பி.1169) திருவக்கரைக் கோயிலின் கோபுரம் கட்டப்பட்டது. அடுத்தப்
பத்தாண்டுகளில் கலை நயமிக்க நூற்றுக்கால் (ஆயிரங்கால்) மண்டபமும் கட்டப்பட்டது.
இதனைக் கட்டியது இப்பகுதியை ஆட்சிசெய்து வந்த அம்மையப்பன் பாண்டிநாடு கொண்டானான கண்டர்
சூரியன் சம்புவராயன்.
10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சந்திர
மௌலீசுவரர் கோயிலில் 40க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. மாமன்னர்கள்
அவர்தம் தேவியர், அரசு அதிகாரிகள் இக்கோயிலுக்குச் செய்த திருப்பணிகள், அளித்த
நிமந்தங்கள் பற்றியத் தகவல்களை கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
முதலாம் குலோத்துங்கச் சோழனின் 29ஆம் ஆண்டு
(கி.பி.1098) கல்வெட்டொன்று இக்கோயிலுக்கு அங்காடி, இவள் மகள் பேரங்காடி ஆகியோரை
தேவரடியாராக தானம் செய்ததைத் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.
மும்முக லிங்கம், தெற்கு நோக்கிய அம்மன், மேற்கு
நோக்கிய பெருமாள், வடக்கு நோக்கிய வக்கிர காளி, மேற்கு நோக்கிய வக்ர லிங்கம்,
தெற்கில் திரும்பிய காக வாகனத்தில் நின்ற வக்ர சனி, ஒரே நேர்க்கோட்டில் அமையாத கொடிமரம்,
திருநந்தி, மூலஸ்தானம் மற்றும் நடராஜரின் வக்கிர தாண்டவம் என அனைத்திலும்
வித்தியாசப்பட்டு நிற்கிறது திருவக்கரை சந்திர மௌலீசுவரர் கோயில.
சேக்கிழார், அருணகிரி நாதர், வள்ளலார்
ஆகியோரும் இத்தலத்தைப் பாடியுள்ளனர்.
இங்குள்ள வக்கிர காளியம்மன் மிகவும்
பிரசித்திப் பெற்றவள்.
ஒவ்வொரு பவுர்ணமியன்றும் இரவு 12 மணிக்குக்
காளியம்மனுக்குச் சிறப்புப் பூசை நடக்கிறது. அப்போது சந்தனக் காப்பு
அலங்காரத்துடன் காட்சியளிக்கும் வக்கிர காளியைக் காணக் கண்கோடி வேண்டும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக