தமிழர்களின்
தொன்மையானப் பண்பாட்டுத் தடயங்களில் குறிப்பிடத்தகுந்தவையாக இருப்பவை பாறை
ஓவியங்களாகும்.
இத்தகைய
ஓவியங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன.
இப்பட்டியலில்
விழுப்புரம் மாவட்டமும் குறிப்பாக ஆலம்பாடி ஓவியங்களும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.
ஆலம்பாடி
கிராமத்துக்குச் சென்று, பாறை ஓவியங்களைப் பார்க்க வேண்டும் என்று சொன்னால்,
முருகன் கோயிலுக்கு வழிகாட்டுவார்கள்.
ஊரின்
மேற்கில், வயல்களுக்கு மத்தியில் பாறைகளின் கூட்டம் காணப்படுகிறது. அவற்றை
அடைவதற்கு வயல் வரப்புகளில் நடந்துதான் போக வேண்டும்.
பரவாயில்லை,
பாறைகளைச் சுற்றி கம்பிவேலியும், உள்ளே நடந்துச் செல்வதற்கு சிமெண்ட் தளமும்
போட்டிருக்கிற தொல்லியல் துறையினரைப் பாராட்ட வேண்டியது தான்.
மேற்கில்
தென்படும் அந்தப் பிரம்மாண்டப் பாறைக்குச் செல்ல கைப்பிடியுடன் கூடிய படிக்கட்டும்
அமைத்திருக்கிறார்கள்.
அதற்குக் கீழே
சிறிய பாறை. அதற்கும் படிக்கட்டு இருக்கிறது.
இந்தப் பாறையில்தான்
தொன்மைவாய்ந்த ஏராளமான ஓவியங்கள் காணப்படுகின்றன.
கீழ்வாலையைப்
போல் இங்கு ஓவியங்கள் மீது தண்ணீர் தெளிக்க வேண்டிய அவசியம் இல்லை. இயல்பாகவே
பளிச்செனத் தெரிகின்றன. ஆனால் ஓவியங்களைப் பார்ப்பதற்கு கவனம்தான் முக்கியம். வழுக்குப்
பாறை. அடிமேல் அடிவைத்து ஜாக்கிரதையாக நகர வேண்டும்.
ஆலம்பாடி
ஓவியங்கள் குறித்து மிகவும் ஆய்வுசெய்த முனைவர் இரா.மதிவாணன், “பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களில்
ஆலம்பாடி குறிப்பிடத்தக்க சிறந்த இடமாக விளங்குகிறது. காரணம், மற்ற இடங்களில்
இல்லாத ஓவிய உருவங்கள், எலும்புக்கூடுகள் இப்பாறை ஓவியங்களில் காணப்படுவதுதான்.
விலங்குகள், மான்,எருது, பன்றி போன்றவை தடித்த வரைகோடுகளால் வரையப்பட்டு சிவப்பு நிறம்
தீட்டப் பெற்றுள்ளது. அதில் சிந்துவெளி எழுத்துக் குறியீடுகள் அங்கு மிங்குமாகக்
காணப்படு கின்றன. அரிய இவ்வெழுத்துக்கள் கலைஅழிப்பு வீணர்களின் வேலைகளால்
அழிக்கப் பட்டுள்ளன” என்கிறார்.
மற்றொரு ஆய்வாளரான டாக்டர் இராசு.பவுன்துரை, “கற்காலப்
பாறை ஓவியங்களில் காணப்படும் மற்றொரு சிறப்பு எக்ஸ்ரே வடிவமாகும். இவ்வடிவத்தினை
பிம்பெட்கா ஓவியத்திலும், தமிழ்நாட்டில் ஆலம்பாடி ஓவியத்திலும் காணமுடிவதாகத்” தெரிவித்துள்ளார்.
இங்குள்ள ஓவியங்களின் மீது மற்றொரு ஓவியமும்
வரையப்பட்டுள்ளது. இதனை இரண்டடுக்கு வண்ணப் பூச்சு என்கின்றனர் ஆய்வாளர்கள். இதனால்
குறிப்பிடப்பட்ட ஓவியங்களைத் தனித்தனியாகக் கண்டறிவதில் சிக்கல் இருக்கிறது.
ஆலம்பாடி ஓவியங்கள் பெருங்கற்காலத்தைச்
(கி.மு.1000-கி.பி.200) சேர்ந்தவையாகும்.
பெரிய பாறைக்கு மேற்பரப்புக்குச் சென்றால்
சிமெண்டால் கட்டப்பட்ட மேடை மீது 20க்கும் மேற்பட்ட வேல்கள் நடப்பட்டுள்ளன. உள்ளூர்
பொதுமக்கள் இவற்றைத்தான் முருகன் கோயில் என்கின்றனர். சரியானதுதான், வேலவனுக்கு
முதல் அடையாளம் வேல்தானே.
இந்தப் பாறைமீது நின்று பார்த்தால் தெற்கில்
திருக்கோவலூர் உலகளந்தப் பெருமாள் கோயிலின் கோபுரங்கள் கண்ணுக்குத் தென்படுகின்றன.
நீங்களும் ஒருமுறை சென்று பார்த்து வரலாம்!
ஆலம்பாடி செல்லும் வழி:
விழுப்புரம் – திருக்கோவலூர் சாலையில் முகையூர்,
சத்தியக்கண்டனூரைக் கடந்து வடக்கில் 3 கி.மீ. பயணிக்க வேண்டும்.
விழுப்புரம் – திருவண்ணாமலைச் சாலையில்
கண்டாச்சிபுரம் சென்று, அங்கிருந்து அரகண்டநல்லூர் செல்லும் சாலை வழியாகவும்
ஆலம்பாடியை அடையலாம்.
விழுப்புரம் வரலாற்று வாசலில் நின்று உங்களை
அன்புடன் வரவேற்கும்,
கோ.செங்குட்டுவன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக