மேல்சித்தாமூர்...
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்தில் இருக்கும் கிராமம்.
இங்குள்ள மலைநாதர் மற்றும் பார்சுவநாதர் கோயில்களும், சமண மடமும்
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தவை.
மலைநாதர் கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் மிகவும் பழமையானது,
கி.பி.888இல் பொறிக்கப்பட்ட முதலாம் ஆதித்தச் சோழனதாகும்.
அப்போது காட்டாம்பள்ளி என்றழைக்கப்பட்ட சித்தாமூர் மலைநாதர் கோயிலின்
ஒத்துரைக்கும் மண்டபத்திற்கும், நந்தா விளக்கெரிக்கவும் தானம் செய்யப்பட்டதைக்
குறிப்பிடுகிறது இக்கல்வெட்டு.
இதில் குறிப்பிடப்பட்டுள்ள கீழ்க்காணும் வாசகம் சிறப்பு வாய்ந்தது.
“ஸ்வஸ்திஸ்ரீ காடவர்கோன்பாவை கனைகழற்காற்
சோழர்க்கு நீடுபுகழ்த்தேவியர் நீணி
லத்துப் பீடு சிறந்தமரும் சிற்றாமூர் செய்திறங்கள்
மீட்ப்பித் தறம் பெரு வாக்குமவள்“
-ஒலிக்கிற கழல்களையணிந்த சோழ மன்னனுடைய புகழ்மிக்க தேவியாகிய காடவர் கோன்
பாவை, இந்த நெடிய நிலப்பரப்பில் பெருமை பொருந்தி விளங்கும் சிற்றாமூரில், முன்பு
செய்யப்பட்ட அறத்தினை மீண்டும் நிலைப்பெறச் செய்து சமண அறங்கள் பெருக வழிவகை செய்தாள்,
என மேற்காணும் கல்வெட்டுச் சாசனத்துக்கு விளக்கம் தருகிறார் ஆய்வாளர்
ஏ.ஏகாம்பரநாதன்.
இதில் குறிப்பிடப்படும் காடவர்கோன்பாவை, முதலாம் ஆதித்தச் சோழனின்
மனைவி திரிபுவன மாதேவியாக இருத்தல் வேண்டும் என்பது ஆய்வாளர்களின் பொதுவானக்
கருத்தாக இருக்கிறது.
ஆனாலும், விழுப்புரம் மாவட்டம் சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு
ஆட்சி செய்த காடவர்கள் நம் நினைவுக்கு வருகிறார்கள். இவர்கள்,
சைவ வைணவக் கோயில்களுக்கு மட்டுமல்லாமல் திருநறுங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் உள்ள
சமணத் தலங்களுக்கும் உதவி செய்துள்ளனர். இந்நிலையில், “காடவர்கோன் பாவை” குறித்த ஆய்வு மிகவும் அவசியமாகிறது.
சரி, மலைநாதர்
கோயிலுக்கு வருவோம். இக்கோயிலில் விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கச் சோழன்,
இரண்டாம் இராசாதிராசன், விஷ்ணு மஹாராயர் ஆகியோர் காலக்கல்வெட்டுகள்
கண்டெடுக்கப்பட்டுள்ளன. இக்கோயிலில் ரிஷபநாதர், நேமிநாதர், பார்சுவநாதர்,
கோமதீசுவரர் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. இங்குள்ள யக்ஷியின் உருவம் பனைமலை சிவன்
கோயிலில் உள்ள பல்லவர் கால உமையவள் பாங்கினை ஒத்திருப்பதாகச் சொல்வார்
ஏ.ஏகாம்பரநாதன்.
மேல்சித்தாமூரில் உள்ள
பார்சுவநாதர் கோயிலின் கருவறை, அர்த்த மண்டபம், முகமண்டபம், மானஸ்தம்பம் ஆகியவை
கி.பி.16ஆம் நூற்றாண்டு கலைப்பாணியை கொண்டுள்ளது. எஞ்சியவை 19ஆம் நூற்றாண்டில்
கட்டப்பட்டவையாகும். இங்குள்ள நேமிநாதர் சிற்பம் சென்னை மயிலாப்பூரில் இருந்த
சமணக் கோயிலில் இருந்து எடுத்து வரப்பட்டதாகும். பார்சுவநாதர் கோயிலில் நாயக்கர்
காலத்தில் வடிக்கப்பட்ட தமிழ், கன்னட வரிவடிவக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
மலைநாதர் மற்றும்
பார்சுவநாதர் கோயில் தூண்கள் ஒருசிலவற்றில் வைணவச் சின்னங்கள் காணப்படுகின்றன.
இத்தூண்கள் செஞ்சி வேங்கடரமணர் கோயிலில் இருந்து எடுத்துவரப்பட்டவை என்பது
குறிப்பிடத்தக்கது.
திருச்சி மாவட்டம்
திருமழபாடி, விழுப்புரம் மாவட்டம் மாறங்கியூர், பரனூர் ஆகிய இடங்களில் உள்ள
கல்வெட்டுகளின் மூலமும், அப்பாண்டைநாதர் உலா, தோத்திரத் திரட்டு, கலியாண வாழ்த்து
போன்ற நூல்களின் மூலமும் சித்தாமூர் கோயில்கள் குறித்த விவரங்களை அறிய முடியும்.
தமிழகத்தில் எஞ்சி
நிற்கக் கூடிய ஒரே சமண மடம் எனும் பெருமையைப் பெற்றுள்ளது மேல்சித்தாமூரில்
அமைந்துள்ள ஜினகாஞ்சி மடம். கி.பி.16ஆம் நூற்றாண்டில் விழுப்புரம் மாவட்டம்
உப்புவேலூரைச் சேர்ந்த வீரசேனாச்சாரியார் என்பவரால் இம்மடம் தோற்றுவிக்கப்பட்டது.
இது, தமிழகத்தில் உள்ள திகம்பரப் பிரிவுச் சமணர்களின் தலைமை மடமாகும்.
1816இல் கர்னல்
மெக்கன்சி இங்கு வந்திருக்கிறார். இம்மடத்தில் சமணசமய புராண, காவியம், கதை,
வியாக்கரண, தர்க்க, ஆசார விதி, பிராகிருதம், தமிழ் மற்றும் அஷ்டக நூல்கள் இருப்பதாக மெக்கன்சி சுவடித் தொகுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பலவும் இன்றளவும் இங்குப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
மேல்சித்தாமூர் மடத்தின் மடாதிபதியாக ஸ்ரீலட்சுமிசேன பட்டாரகர் இருக்கிறார். இப்பெயரானது, மடத்தின் தலைமைப் பொறுப்பேற்கும் அனைவருக்கும் அளிக்கப்படும் பொதுவானப் பெயராகும் என்பது குறிப்பிடத்தக்கது.
து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக