செவ்வாய், 24 நவம்பர், 2015

எல்லீஸ் அணைக்கட்டு

எல்லீஸ் சத்திரம்...

விழுப்புரத்தின் மேற்கே இருக்கக் கூடிய ஒரு பகுதியின் பெயர். விழுப்புரத்தில் இருந்து இந்தப் பகுதிக்குப் போகும் சாலைக்கும், எல்லீஸ் சத்திரம் சாலை என்றே பெயர்.

இதன் பெயருக்கும் புகழுக்கும் காரணமாக அமைந்திருப்பது இங்குள்ள அணைக்கட்டு.

தமிழ்நாட்டில், தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 6ஆவது அணைக்கட்டு, எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டாகும்.

முதல் 5-அனியாளம், கிருஷ்ணகிரி, நடுங்கல், சாத்தனூர், திருக்கோவலூர் ஆகியவை யாகும். 7ஆவதாக அமைந்துள்ளது, புதுவை மாநிலம் அருகே உள்ள சொர்ணாவூர் அணைக்கட்டு.

எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு 1949இல் தொடங்கப்பட்டு 1950இல் கட்டி முடிக்கப் பெற்றது. 1967இல் விரிவாக்கம் செய்யப்பட்டது.


வினாடிக்கு 2இலட்சத்து 28ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றும் வகையில் இந்த அணை அமைக்கப்பட்டுள்ளது. இதன் நீர்ப்பிடிப்புப் பகுதி 12ஆயிரத்து 481 சதுர கி.மீ. ஆகும்.

எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டின் மேல் 22ஆவது கி.மீ.இல் திருக்கோவலூர் அணைக்கட்டும், கீழே 31ஆவது கி.மீ.இல் சொர்ணாவூர் அணைக்கட்டும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டின் வலதுபுறமுள்ள எரளூர் வாய்க்கால் மூலம் பேரங்கியூர், அவியனூர், பைத்தாம்பாடி, அழகுபெருமாள் குப்பம் ஆகிய ஏரிகளுக்கும்,

ரெட்டி வாய்க்கால் மூலம் சாத்தனூர், மேலமங்கலம், இருவேல்பட்டு, காரப்பட்டு, மணம் தவிழ்ந்த புத்தூர், ஓரையூர், சேமக்கோட்டை ஆகிய ஏரிகளுக்கும்,

இடதுபுறமுள்ள ஆழங்கால் வாய்க்கால் மூலம் சாலாமேடு, சாலமடை, கொளத்தூர், பானாம்பட்டு, ஆனாங்கூர், அகரம் சித்தேரி, ஓட்டேரி பாளையம், சிறுவந்தாடு, வளவனூர் ஏரிகளுக்கும்,

கண்டம்பாக்கம் வாய்க்கால் மூலம் கண்டமானடி, கண்டம்பாக்கம், வழுதரெட்டி ஆகிய ஏரிகளுக்கும் தண்ணீர் சென்றடைகிறது.

எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டுக்கு அருகில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு, அங்கிருந்து விழுப்புரம் நகருக்குத் தண்ணீர் எடுத்து வரப்படுகிறது.

1968இல் இதற்கு அடிகோலிட்டவர், அப்போதைய விழுப்புரம் நகரமன்றத் தலைவராக இருந்த டாக்டர் தியாகராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்ணையாற்றின் தண்ணீரைக் குடித்து வளர்ந்தவர்கள் என்று, இன்றும் எங்களால் பெருமையாகச் சொல்லிக் கொள்ள முடிகிறது.


எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு, விழுப்புரம் சுற்றுப்புறங்களில் உள்ளவர்களுக்கு, சின்னச் சுற்றலாத்தலமாக விளங்குகிறது. குறிப்பாக காதலர்க்கு!

கடந்த சில வாரங்களாகப் பெய்துவந்த தொடர் மழை, சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு ஆகியவற்றால் நிரம்பி வழிகிறது எல்லீஸ் சத்திரம் அணை.


நீங்கள் அருகிலிருப்பவர் என்றால் ஒரு நடை போய்விட்டு வரலாம், குடும்பத்தோடு..! 

செவ்வாய், 17 நவம்பர், 2015

ஆலம்பாடி பாறை ஓவியங்கள்

தமிழர்களின் தொன்மையானப் பண்பாட்டுத் தடயங்களில் குறிப்பிடத்தகுந்தவையாக இருப்பவை பாறை ஓவியங்களாகும்.

இத்தகைய ஓவியங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன.

இப்பட்டியலில் விழுப்புரம் மாவட்டமும் குறிப்பாக ஆலம்பாடி ஓவியங்களும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.

ஆலம்பாடி கிராமத்துக்குச் சென்று, பாறை ஓவியங்களைப் பார்க்க வேண்டும் என்று சொன்னால், முருகன் கோயிலுக்கு வழிகாட்டுவார்கள்.

ஊரின் மேற்கில், வயல்களுக்கு மத்தியில் பாறைகளின் கூட்டம் காணப்படுகிறது. அவற்றை அடைவதற்கு வயல் வரப்புகளில் நடந்துதான் போக வேண்டும்.

பரவாயில்லை, பாறைகளைச் சுற்றி கம்பிவேலியும், உள்ளே நடந்துச் செல்வதற்கு சிமெண்ட் தளமும் போட்டிருக்கிற தொல்லியல் துறையினரைப் பாராட்ட வேண்டியது தான்.

மேற்கில் தென்படும் அந்தப் பிரம்மாண்டப் பாறைக்குச் செல்ல கைப்பிடியுடன் கூடிய படிக்கட்டும் அமைத்திருக்கிறார்கள்.

அதற்குக் கீழே சிறிய பாறை. அதற்கும் படிக்கட்டு இருக்கிறது.

இந்தப் பாறையில்தான் தொன்மைவாய்ந்த ஏராளமான ஓவியங்கள் காணப்படுகின்றன.


கீழ்வாலையைப் போல் இங்கு ஓவியங்கள் மீது தண்ணீர் தெளிக்க வேண்டிய அவசியம் இல்லை. இயல்பாகவே பளிச்செனத் தெரிகின்றன. ஆனால் ஓவியங்களைப் பார்ப்பதற்கு கவனம்தான் முக்கியம். வழுக்குப் பாறை. அடிமேல் அடிவைத்து ஜாக்கிரதையாக நகர வேண்டும்.

ஆலம்பாடி ஓவியங்கள் குறித்து மிகவும் ஆய்வுசெய்த முனைவர் இரா.மதிவாணன், “பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களில் ஆலம்பாடி குறிப்பிடத்தக்க சிறந்த இடமாக விளங்குகிறது. காரணம், மற்ற இடங்களில் இல்லாத ஓவிய உருவங்கள், எலும்புக்கூடுகள் இப்பாறை ஓவியங்களில் காணப்படுவதுதான். விலங்குகள், மான்,எருது, பன்றி போன்றவை தடித்த வரைகோடுகளால் வரையப்பட்டு சிவப்பு நிறம் தீட்டப் பெற்றுள்ளது. அதில் சிந்துவெளி எழுத்துக் குறியீடுகள் அங்கு மிங்குமாகக் காணப்படு கின்றன. அரிய இவ்வெழுத்துக்கள் கலைஅழிப்பு வீணர்களின் வேலைகளால் அழிக்கப் பட்டுள்ளனஎன்கிறார்.

மற்றொரு ஆய்வாளரான டாக்டர் இராசு.பவுன்துரை, “கற்காலப் பாறை ஓவியங்களில் காணப்படும் மற்றொரு சிறப்பு எக்ஸ்ரே வடிவமாகும். இவ்வடிவத்தினை பிம்பெட்கா ஓவியத்திலும், தமிழ்நாட்டில் ஆலம்பாடி ஓவியத்திலும் காணமுடிவதாகத்தெரிவித்துள்ளார்.

இங்குள்ள ஓவியங்களின் மீது மற்றொரு ஓவியமும் வரையப்பட்டுள்ளது. இதனை இரண்டடுக்கு வண்ணப் பூச்சு என்கின்றனர் ஆய்வாளர்கள். இதனால் குறிப்பிடப்பட்ட ஓவியங்களைத் தனித்தனியாகக் கண்டறிவதில் சிக்கல் இருக்கிறது.

ஆலம்பாடி ஓவியங்கள் பெருங்கற்காலத்தைச் (கி.மு.1000-கி.பி.200) சேர்ந்தவையாகும்.

பெரிய பாறைக்கு மேற்பரப்புக்குச் சென்றால் சிமெண்டால் கட்டப்பட்ட மேடை மீது 20க்கும் மேற்பட்ட வேல்கள் நடப்பட்டுள்ளன. உள்ளூர் பொதுமக்கள் இவற்றைத்தான் முருகன் கோயில் என்கின்றனர். சரியானதுதான், வேலவனுக்கு முதல் அடையாளம் வேல்தானே.


இந்தப் பாறைமீது நின்று பார்த்தால் தெற்கில் திருக்கோவலூர் உலகளந்தப் பெருமாள் கோயிலின் கோபுரங்கள் கண்ணுக்குத் தென்படுகின்றன.

நீங்களும் ஒருமுறை சென்று பார்த்து வரலாம்!

ஆலம்பாடி செல்லும் வழி:


விழுப்புரம் – திருக்கோவலூர் சாலையில் முகையூர், சத்தியக்கண்டனூரைக் கடந்து வடக்கில் 3 கி.மீ. பயணிக்க வேண்டும்.
விழுப்புரம் – திருவண்ணாமலைச் சாலையில் கண்டாச்சிபுரம் சென்று, அங்கிருந்து அரகண்டநல்லூர் செல்லும் சாலை வழியாகவும் ஆலம்பாடியை அடையலாம்.

விழுப்புரம் வரலாற்று வாசலில் நின்று உங்களை அன்புடன் வரவேற்கும்,

கோ.செங்குட்டுவன். 

திங்கள், 16 நவம்பர், 2015

பல்லவன் வெட்டிய பனைமலை ஏரி

ஒவ்வொரு முறையும் சென்னைக்குச் செல்லும் போதும் மாமண்டூரில், பரந்து விரிந்து காணப்படும், அந்த ஏரியைப் பார்த்துப் பெருமூச்சு விடுவேன்.

பல்லவரின் நீர் மேலாண்மைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழும் ஏரி அது.

அப்போது என் உள்மனம் சொல்லும், “உன் மாவட்டத்திலும் பல்லவர் வெட்டிய ஏரி இருக்கிறதே.“

அப்படியா? எங்கு? பனைமலையில்...!

பனைமலை ஏரியைப் பார்க்கும் வாய்ப்பு 2001இல் தான் எனக்குக் கிடைத்தது.

“நந்தன் கால்வாய்த் திட்டம் தொடர்பான விவரங்கள் சேகரிப்பதாக, நண்பர் அன்னியூர் சிவா அவர்களின் துணையுடன் பனைமலை கிராமத்துக்குச் சென்றேன்.

குன்றின் அருகே மேற்கில், வானையும் நிலத்தையும் இணைப்பதுப் போன்று பிரம்மாண்டாகக் காட்சியளித்தது பனைமலை ஏரி.

நானும் சிவாவும் ஏரியில் இறங்கி சிலஅடிகள் நடந்தோம். பாளம் பாளமாக வெடித்திருந்தது. மழைத் துளியைப் பார்த்து வருடங்கள் பலவாகின்றதாம்!

2011இல் “நந்தன் கால்வாய் நூலுக்காக மீண்டும் பனைமலை ஏரிக்குச் சென்றேன்.

இப்போது நிலைமை மாறியிருந்தது. அப்போதுதான் மழை பெய்திருந்ததால் ஏரிமுழுக்கத் தண்ணீர் நிரம்பி, கண்களுக்கு விருந்தாகவும், புகைப்படம் எடுக்கவும் அழகாக இருந்தது.


பொறியாளரும் மூத்தஆய்வாளருமான காலஞ்சென்ற கொடுமுடிச.சண்முகன் பனைமலை ஏரி குறித்து இப்படி விவரிப்பார்:

“80 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரி 30 அடி ஆழம் உள்ளது. இதன் தொழில்நுட்பம் பார்த்து வியக்கத்தகுந்தது. தொடர்ச்சியாக பல மலைக்கரடுகளை இணைத்து இடையில் சிறுசிறு நீளத்திற்கு மட்டும் கரை அமைக்கப்பட்டுள்ளது. 30 அடி ஆழ மதகும் கால்வாயும் உள்ளன. ஒரு கோடியில் உள்ள பாறையே கழிங்கலாக அமைக்கப்பட்டுள்ளது. கட்டுமானச்சிக்கனத்திற்கு இது எடுத்துக்காட்டு. இன்றைய மேட்டூர் அணையோடு, பனைமலை ஏரி பல வகையில் ஒப்பிடத்தகுந்தது.


பல்லவர் கால கட்டட, ஓவியக் கலைக்குச் சான்றாதாரமாக இன்றும் நின்றிருக்கும் தாளகிரீசுவரர்க் கோயில், பனைமலை ஏரிக்கு அருகிலேயே குன்றின் மீது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


“இந்த ஏரி அமைத்து வளம் பெருகிய பின்னரோ அல்லது சமகாலத்திலோ தாளகிரீசுவரர் ஆலயம் அமைந்திருக்கலாம்என்பதும் கொடுமுடியாரின் கருத்தாகும்.

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சல் ஆற்றில் இருந்துத்தொடங்கும் நந்தன் கால்வாய், பனைமலை ஏரியில் சேர்கிறது.

இந்த ஏரியின் மூலம் 1079.24 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

மேலும் நங்காத்தூர், முட்டத்தூர், நகர், பிரம்மதேசம், எசாலம், பெருங்கலம்பூண்டி, அன்னியூர், வெள்ளேரிப்பட்டு, வீரமூர், வெங்கந்தூர், ஆரியூர் ஆகிய ஊர்களுக்கான ஏரிகளுக்கும் இங்கிருந்துதான் தண்ணீர் செல்கிறது என்பதும் குறிப்பிடத்தகுந்ததாகும்.

பனைமலை ஏரியின் கிழக்கில் நந்தன் கால்வாய்த் திட்டத்தின் கதாநாயகரான, மறைந்த அமைச்சர் ஏ.கோவிந்தசாமி (அண்ணா, கலைஞர் அமைச்சரவைகளில் வேளாண்துறை அமைச்சர் பதவி வகித்தவர்) அவர்களின் சிலை நிறுவப்பட்டுள்ளது


பல ஏரி கல்வெட்டுகளில் அதை வெட்டுவித்தவர்கள் “ஏரியை காப்பவர் அடி என்முடி (தலை) மேலனஎன்று சொல்லியிருப்பார்கள்.

இந்தச் சொல்லை சிரமேற் கொண்டவர்கள்தான், பனைமலை ஏரியை இன்னமும் ஏரியாகவே வைத்திருக்கின்றனர்.

இன்று, ஏரிகள் பலவும் பேருந்து நிலையங்களாகவும், பெருந்திட்ட வளாகங்களாகவும்,  மருத்துவக் கல்லூரிகளாகவும் மாறிவருகின்றன. இன்னும் சில ஏரிகளை பழைய வரைபடங்களில் மட்டுமே பார்க்க முடிகின்றது.

மிச்சம் மீதியிருக்கும் போரூர் ஏரி போன்றவற்றைக் காப்பாற்றுவதற்குத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்.

இந்தச் சூழலில், வரலாறுப் பண்பாட்டுக் கூறுகளின் எச்சமாகவும், விவசாயத்துக்கும் நிலத்தடி நீராதாரத்திற்கும் நிலைக்களனாகவும் பனைமலை ஏரி

எஞ்சி நிற்பது மகிழ்ச்சியைத் தருகிறது...!


பனைமலை:

விழுப்புரம்-செஞ்சி சாலையில் சூரப்பட்டு சென்று, அங்கிருந்து வடக்கே 7ஆவது கி.மீ.இல் அமைந்துள்ளது. செஞ்சி-அனந்தபுரம் வழியாகவும் இங்கு வரலாம். 

கீழ்வாலைப் பாறை ஓவியங்களும் சிந்துசமவெளி நாகரிகமும்

“தென்னிந்தியாவின் கற்கால மனிதன் காடுகளில் வசிக்கவில்லை. மலையை ஒட்டிய பீட பூமிகளில்தான் வசித்தான்என்பார் ஆய்வாளர் வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர்.

விழுப்புரம் மாவட்டத்தில் கீழ்வாலை, ஆலம்பாடி, உடையாநத்தம்,பெருமுக்கல் உள்ளிட்ட இடங்கள் தொல்பழங்கால மனிதர்கள் வாழ்ந்திருந்த இடங்களாகும்.

அவற்றிற்கான அடையாளங்கள் இன்றும் இப்பகுதிகளில் நிலைத்துள்ளன.

குறிப்பாகக் கீழ்வாலை பற்றி இங்குப் பேசலாம்.

விழுப்புரம் – திருவண்ணாமலைச் சாலையில் 28ஆவது கி.மீ.இல் அமைந்துள்ளது இந்த ஊர்.

நெடுஞ்சாலையில் இருந்து தெற்கே மண்சாலையில் இறங்கி சிறிது தூரம் நடக்க வேண்டும்.

சிறிதும் பெரிதுமானக் குன்றுகள் காணப்படுகின்றன. இதில், “இரத்தக் குடைக்கல் பாறைகுறிப்பிடத்தகுந்ததாகும்.


இந்தப் பாறையில்தான் விலங்கு, பறவை முகம் கொண்ட மனிதர்கள், கோடுகள் புள்ளிகளைக் கொண்ட ஏராளமானக் குறியீடுகள் என சிவப்பு நிறத்திலான ஓவியங்கள் நிறைந்துள்ளன. (அதனால்தான் இரத்தக் குடைக்கல் என்கின்றனேரோ?)

மங்கிய நிலையில் காணப்படும் இவ்வோவியங்கள் மீது தண்ணீர் தெளித்தால் பளிச்செனத் தெரியும்.



“கீழ்வாலை ஓவியங்கள் கி.மு.500இல் இருந்து 1000 ஆண்டுகளுக்கு உட்பட்டதாக இருக்கலாம்என அறிஞர் பி.எல்.சாமி தெரிவித்துள்ளார். “கீழ்வாலைப் பாறை ஓவியங்கள் பல சொற்களின் தொகுப்பு. ஒவ்வொரு ஓவியமும் ஒருசொல்லின் அறிகுறிஎன்பார் ஆய்வாளர் கா.இராஜன். “தொல்பழங்கால ஓவியம் பற்றிய வரைபடத்தில் தமிழகத்திற்கும் ஒருசிறப்பான இடத்தை அளிக்கும் வகையில் கீழ்வாலை ஓவியங்கள் அமைந்திருப் பதாகத்தெரிவித்துள்ளார் ஆய்வாளர் கே.வி.இராமன்.
  
உலகின் மிகச்சிறந்த நாகரிகங்களுள் ஒன்று சிந்துசமவெளி நாகரிகம். “தென்னிந்தியா வில் இருந்து வடக்கே சென்ற திராவிட மொழி பேசுநர் உருவாக்கியதே சிந்துவெளி நாகரிகம்என ஹீராஸ் பாதிரியாரும், “சிந்துவெளி நாகரிக எச்சங்கள் திராவிட நாகரிகம் சார்ந்தவைஎன சர் ஜான் மார்ஷலும் தெரிவித்துள்ளனர்.

திராவிட மொழி பேசுநர் வடக்கு நோக்கிப் பரவினர் எனும் கருத்தினை ஹெச்.ஆர். ஹால், பி.டி.சீனிவாச ஐயங்கார், வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர், கா.சுப்ரமணியப் பிள்ளை, மறைமலையடிகளார், சேவியர் தனிநாயகம் அடிகளார், ஞா.தேநேயப் பாவாணர் உள்ளிட்ட அறிஞர்களின் கருத்தாகும்.

மேலும் சிந்துவெளியில் காணப்படும் முத்திரை எழுத்துக்கள் தொல்தமிழே என்பதும் அறிஞர் பெருமக்களின் கருத்தாகவும் இருக்கிறது.

இந்நிலையில்,

தமிழகப் பாறை ஓவியங்கள் குறித்து மிகவும் ஆய்வுசெய்த ஆய்வாளர் இராசு.பவுன் துரை சொல்வார் “சிந்துசமவெளியில் கிடைக்கப்பெற்ற வரி வடிவங்களைப் போன்று கீழ்வாலையிலும் அமைந்துள்ளன.” “சிந்துவெளி எழுத்துக்கள் குமரி முனையில் இருந்து சிந்துவெளி வரை பரவியிருந்தது என்பதற்கு கீழ்வாலைப் பாறை ஓவியமும் சிந்துவெளி எழுத்தும் அருமையான சான்றுகளாக விளங்குவதாகபேராசிரியர் இரா.மதிவாணன் தெரிவித்துள்ளதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

80களின் இறுதியில் கீழ்வாலை ஓவியங்களைக் கண்டறிந்தவரும், இதுகுறித்து மிகவும் ஆய்வு செய்தவருமான அனந்தபுரம் கோ.கிருட்டின மூர்த்தி, “17 கோடுகள் உள்ள சூரியன், வட்டத்தில் கூட்டல் குறி, சாய்வான நிலையில் கூட்டல் குறி, சூலம், நட்சத்திரக் குறி, தொங்கும் உடுக்கை, வேர் உள்ள மரம் உள்ளிட்ட பல்வேறு வகையான குறியீடுகள் கீழ்வாலை ஓவியங்களில் காணப்படுவதாகவும், 50க்கும் மேற்பட்டக் குறியீடுகள் சிந்துவெளி முத்திரைக் குறியீடுகளோடு ஒத்திருப்பதாகவும்தெரிவித்துள்ளார்.


தொல்பழங்கால மனிதர்களின் கருத்துப் பரிமாற்றம், வேட்டையாடுதல், சடங்கு ஆகியவற்றை விளக்குவதாக கீழ்வாலை ஓவியங்கள் அமைந்திருக்கின்றன.

இதில் முக்கிய இடத்தைப் பெற்றிருப்பது, படகில் மூன்றுபேர் செல்வது போன்ற காட்சியாகும். “இது பழந்தமிழரின் கடல்சார் அறிவினைக் காட்டவல்லதுஎன்பார் முனைவர் சு.தில்லைவனம்.

உலகின் புகழ்ப்பெற்ற நாகரிகத்துக்குச் சொந்தக்காரர்கள் நாம். தொல் குடிமக்கள் வாழ்ந்தப் பகுதிகளில் நாமும் வசித்து வருகிறோம் என்றெல்லாம் நாம் பெருமை பாராட்டிக் கொள்ளலாம்.

இதற்கு வரலாற்று ஆதாரமாக இருக்கும் கீழ்வாலைப் பாறைஓவியங்களும், சுற்றுப்புறங்களும் இன்று எப்படி இருக்கின்றன?

ஓவியங்கள் அடங்கியப் பாறைகளைச் சென்றடைய சரியான வழித்தடம் கிடையாது. வழிகாட்டுநரும் இல்லை. தனியாரின் வயல்வரப்புகளைக் கடந்துதான் செல்ல வேண்டும். ஓவியங்கள்மீது கிறுக்கல் பிடித்தச் சிலர் கிறுக்கத் தொடங்கிவிட்டனர். பழங்கால மக்களின் வாழ்விடமாக இருந்தது, தற்போது குடிமக்களின் கூடரமாகியுள்ளது. மதுபாட்டில்களின் சிதறல்கள் உங்கள் கால்களைப் பதம்பார்க்கலாம். ஜாக்கிரதை!

மக்கள் பார்வையில் படாதவரை 3ஆயிரம் ஆண்டுகளுக்கும்மேல் பாதுகாப்பாக இருந்தப் பாறை ஓவியங்கள், மக்கள் பாதம்பட்ட 50ஆண்டுகளில் மெல்ல அழிவைச் சந்தித்து வருகின்றன என்றுதான் சொல்ல வேண்டும்!

சுற்றிலும் மலைக்குன்றுகள் தொடர்ந்து உடைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஓவியங்கள் உள்ள குன்றுகளை “உடைப்பாளர்களிமிருந்துக் காப்பாற்றியது அரசின் சாதனைதான். ஆனால் தொடர்ந்து இவை காப்பாற்றவும் பாதுகாக்கப்படவும் வேண்டுமே?   
உதவியவை:
தமிழரின் தோற்றமும் பரவலும் – வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர் (தமிழில் பி.இராமநாதன்)

தமிழ்நாட்டில் சிந்துவெளிக் குறியீடுகள் ஒரு பார்வை – அனந்தபுரம் கோ.கிருட்டின மூர்த்தி (மஞ்சரி ஏப் 1994)

தமிழ்நாட்டு ஓவியங்கள் – ஏ.எஸ்.இராமன்.

தமிழகப் பாறை ஓவியங்கள் – டாக்டர் இராசு.பவுன்துரை.

திராவிட மக்களின் சிந்துவெளி எழுத்துக்கள் – முனைவர் இரா.மதிவாணன்.

கல்வெட்டியல் – கா.இராஜன்.

பழந்தமிழர் நாகரிகச் சின்னம் அரிக்கமேடு – முனைவர் சு.தில்லைவனம்.


வரலாற்றில் விழுப்புரம் மாவட்ட ஊர்கள் – கோ.செங்குட்டுவன்.